ராசிபுரம் அருகே கூனவேலம்பட்டிபுதூர் பகுதியில் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இக் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் விசைத்தறி நெசவு. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒருவித காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனால் இவர்களுக்கு கைகால் வலி, மூட்டுவலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகினறனர். மேலும் அப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தும் திறக்கப்படாததால், இவர்கள் ராசிபுரம், சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். பலரது வீடுகளில் காய்ச்சல் பாதிப்பு உள்ளதால், விசைத்தறி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறை இக் கிராமத்தில் முகாமிட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அப்பகுதியில் மூடியே கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தைத் திறந்து மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதியினர்.