பட்டப்படிப்பு முடித்துள்ள மாணவியர் சம்பந்தப்பட்ட துறையில் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பொ.குழந்தைவேல்.
நாமக்கல் டிரினிடி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் 14-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் கல்லூரித் தலைவர் பி.எஸ்.கே. செங்கோடன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. செயலர் கே.நல்லுசாமி, டிரினிடி மெட்ரிக். பள்ளித் தலைவர் ஆர். குழந்தைவேல் மற்றும் டிரினிடி அகாதெமி இயக்குநர் பி.தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் எம்.ஆர். லட்சுமிநாராயணன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பொ.குழந்தைவேல் பங்கேற்று 473 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கிப் பேசியது:
இந்தியாவிலேயே தமிழகம் உயர் கல்வியில் அதிக மாணவர் சேர்க்கை பெற்று சிறப்பிடம் பெற்று வருகிறது. தமிழகத்தில் தற்போது 46 சதவீதம் பேர் உயர்கல்வி பெறுகிறார்கள். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது இது அதிகம்.
இந்தியாவில் தற்போது ஏறத்தாழ 900 பல்கலைக்கழகங்களும், 50,000-க்கும் மேற்பட்ட கல்லூரிகளும் உள்ளன. இதில் ஏறத்தாழ 10,000 கல்லூரிகள் மகளிர் கல்லூரிகளாக செயல்படுகின்றன.
பட்டம் பெற்று வெளியில் செல்லும் மாணவியர்கள் தங்கள் துறைகளில் மேலும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நிகழாண்டு முதல் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் இணைவுப் பெற்ற கல்லூரிகளை சார்ந்த நல்லாசிரியர்களை திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கப்பட உள்ளது. இதில் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள இப்பல்கலைக்கழகத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் கெளரவிக்கப்படுவார்கள் என்றார்.
இந்நிகழ்வில் துறைத்தலைவர்கள் டி.கே.அனுராதா, ஜி.கண்ணகி, கே.தங்கம்மாள், பி.சுமதி, என்.தங்கமணி, கே.வளர்மதி, ஜி.செல்வலட்சுமி, நிர்வாக அலுவலர் என்.எஸ்.செந்தில்குமார் பேராசிரியர்கள், பணியாளர்கள், நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.
விழாவில் பல்கலைக் கழகத் தரப்பட்டியலில் இடம் பெற்று 2ஆவது ரேங்க் பெற்ற பி.காம் மாணவி எஸ்.அனுகிரஹா மற்றும் 9ஆவது ரேங்க் பெற்ற எம்.ஏ.ஆங்கிலம் மாணவி ஜே.மோகிதா ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.