மயான பாதையில் தனிநபர் தடையை நீக்கி பாதை ஏற்படுத்தித் தர வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேந்தமங்கலம் வட்டம் எஸ்.பழையபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்கள், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்டச் செயலர் ப. செந்தமிழன் தலைமையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு. ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
எஸ்.பழையபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்களுக்கென 2015-ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி மயானத்துக்கு தனி இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. இந்த மயானத்துக்குச் செல்ல பாதையும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இந்தப் பாதை வழியாக 10-க்கும் மேற்பட்ட உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், மயானப் பாதையை, அதே ஊரைச் சேர்ந்த தனிநபர் மறித்து தடை ஏற்படுத்தியுள்ளார். இதில் ஆட்சியர் தலையிட்டு மயானத்துக்குச் செல்ல நிரந்தர பாதை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.