பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க மாவட்டத் தலைவர் ஏ. செல்வம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கா. முரளி, இணைச் செயலாளர் ஜே.சாலை சுப்ரமணியம், அமைப்புச் செயலாளர் ச. அ. கோபி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் ப. அன்பழகன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 32 ஆண்டுகளாகியும் பதவி உயர்வு இல்லாத நிலையைப் போக்கும் வகையில், கூடுதல் பதவி உயர்வு பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் தலைமை மருந்தாளுநர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். 385 வட்டார மருத்துவமனைகளில், மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். புற ஓய்வூதிய திட்டம், புற ஆதார முறை பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
முன்னதாக மாவட்டச் செயலர் ஆர். கார்த்திகேயன், துணைத் தலைவர் எம்.சேகர், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கு. ராஜேந்திர பிரசாத் ஆகியோர் பங்கேற்றுப் பேசினார். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பல்வேறு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.