குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து, பிள்ளாநல்லூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் கட்டணம், சொத்துவரி பலமடங்கு அண்மையில் உயர்த்தப்பட்டன. போதிய குடிநீர் விநியோகம் செய்யப்படாத நிலையில், குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே வெண்ணந்தூர், அத்தனூர், பிள்ளாநல்லூர், ஆர்.பட்டணம், நாமகிரிப்பேட்டை, ஆர்.புதுப்பட்டி உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்த நிலையில், பிள்ளாநல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு திமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.காந்திசெல்வன் தலைமை வகித்தார். திமுக இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மாவட்ட திமுக பொருளாளர் கே.செல்வம், ஒன்றியச் செயலர் கே.பி.ஜெகந்நாதன், பேரூர் செயலர் டி.பி.எஸ்.கார்த்திகேயன், பட்டணம் ஆர்.நல்லதம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.