விநாயகர் சதுர்த்தி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளதையடுத்து, விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராக உள்ளன. நாமக்கல்லில் சிலைகள் விற்பனை தொடங்கியுள்ளது.
நாமக்கல்லில் சேலம், திருச்சி, மோகனூர் சாலைகளில் ஏராளமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. தற்போது நீர்நிலைகளில் ப்ளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றால் செய்யப்பட்ட சிலைகளை கரைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மண் விநாயகர் சிலை விற்பனை நன்றாக உள்ளது என சிலை விற்பனை செய்பவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விநாயர் சிலை விற்பனை செய்பவரான கிருஷ்ணமூர்த்தி கூறியது:-
விநாயகர் சிலைகள் நாமக்கல் நகரிலேயே தயாரிக்கப்படுகின்றன. யாழி விநாயகர், சிம்ம வாகன விநாயகர், குதிரை வாகன விநாயகர் , கருட வாகன விநாயகர், சித்திபுத்தி விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், சிவன் பார்வதியுடன் உள்ள விநாயகர் என 150 வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளன.
அதனைவிட நிகழாண்டு புதிதாக சிவன் வடிவிலான சிக்ஸ் பேக் விநாயகர் சிலை, பாகுபலி விநாயகர் சிலை, கிருஷ்ணன் வடிவிலான விநாயகர் சிலை, மயில் வாகன விநாயகர் சிலை, மார்வல் வண்ண விநாயகர் சிலை உள்ளிட்ட 12 புதிய வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அரை அடி முதல் 3 அடி வரையிலான உயரத்தில் ரூ.20 முதல் விநாயகர் சிலைகள் கிடைப்பதால் குழந்தைகளும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
மண் விநாயகரை வாங்கி நீர்நிலைகளில் கரைப்பதால் நீர் நிலைகள் மாசுபடாமல் இருப்பதோடு மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் உயர உதவியாக இருக்கும். எனவே, பொதுமக்கள் மண் விநாயகர் சிலைகள் வாங்கி சுற்றுச்சூழலுக்கும், மண்பாண்டத் தொழிலாளர்களுக்கும் உதவ வேண்டும் என்றார்.