கெட்டுப் போன ஆவின் பாலை விற்பனை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, பா.ம.க.வினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிரட்ஸ் சாலை, கீரைக்காடு தெருக்களில் ஆவின் பால் வாங்கிக் காய்ச்சி அருந்தியவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் குழந்தைகள், சிறுவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே மாநகராட்சி நகர் நல அலுவலர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா தலைமையில் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தப்பட்டது.
ஆவின் அதிகாரிகள் ஆய்வு நடத்தி 550 லிட்டர் பால் பாக்கெட்டுகளை திரும்பப் பெற்றதுடன், பால் ஏற்றிச் சென்ற தனியார் லாரியின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தனர்.
இந்தநிலையில் பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலர் ரா.அருள், மாநகர மாவட்டச் செயலர் கதிர் ராசரத்தினம் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது.
அதில், ஆவின் பால் விற்பனை செய்ததில் பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்துள்ளது. கெட்டுப்போன பாலை விற்பனைக்கு அனுப்பிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரட்ஸ் சாலை, வின்சென்ட் சாலை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் கெட்டுப் போன பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.