சேலம் மாவட்டத்தில் இரண்டாவது தவணை போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
சேலம் மாவட்டத்தில் 2216 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஐந்து வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், டோல்கேட் மற்றும் தனியார் சொட்டு மருந்து முகாம் மையங்களிலும், 9 நடமாடும் சொட்டு மருந்து முகாம்களிலும், 77 போக்குவரத்து முகாம்களிலும், போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படவுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் தவணையாக 3,63,425 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இதுவரை எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், பெற்றோர்கள் தங்களுடைய பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி, போலியோ நோயிலிருந்து தங்களது குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.