தம்மம்பட்டி அஞ்சல் நிலையத்தை விசாலமான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தம்மம்பட்டி அஞ்சல் நிலையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுவேத நதிக்கரையோரம் உள்ள தனியார் கட்டடத்தில் இயங்கி வந்தது. அந்த இடம் பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் விசாலமானதாக இருந்தது பொதுமக்களுக்கு வசதியாக இருந்தது.
அதற்குப் பின்னர், தம்மம்பட்டி நூலகத்துக்கு மேற்குப் பகுதியில் உள்ள குறுகிய சந்தில் அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. இந்த இடம் மிகவும் குறுகியதாக, இடநெருக்கடி மிக்கதாகவும் உள்ளது.
உலிபுரம், செந்தாரப்பட்டி, முள்ளுக்குறிச்சி ஆகிய ஊர்களில் உள்ள துணை அஞ்சலகங்களுக்கு தம்மம்பட்டி அஞ்சலகம் தான் தலைமையிடம். அதேபோல, இந்த மூன்று ஊர்களுக்கும், தம்மம்பட்டி அஞ்சலகம்தான் பணம்பரிமாற்றுத் தலைமையிடம் (கேஷ் ஆபீஸ்). தம்மம்பட்டி அஞ்சலகத்தில் மட்டும் சேமிப்புக் கணக்கு, தொடர் இட்டுவைப்பு, இட்டுவைப்பு, அஞ்சல் காப்பீடு என சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கணக்கு வைத்துள்ளனர்.
ஆத்தூர் தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு அடுத்த நிலையில், தம்மம்பட்டி பிரதான அஞ்சல் நிலையமாக உள்ளது.
இதுகுறித்து தம்மம்பட்டி அஞ்சல் நிலைய வாடிக்கையாளர்கள் கூறியதாவது: தம்மம்பட்டி அஞ்சல் நிலையம் குறுகிய சந்தில் இருப்பதால் வந்து செல்வதற்கு இடையூறாக இருந்துவருகிறது. முதியோர் இதனால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே குறுகிய இடத்தில் செயல்பட்டுவரும் தம்மம்பட்டி அஞ்சல் நிலையத்தை விசாலமான வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என்றனர்.