எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் அப்பகுதியில் உள்ள கசிவுநீர் குட்டைகள் நிரம்பின.
எடப்பாடி சுற்றுப்புற பகுதிகளான வெள்ளரிவெள்ளி, மொரசப்பட்டி, சித்தூர், செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு வரை பலத்த மழை கொட்டியது. முன்னதாக பகல் முழுவதும் கடும் வெப்பம் நிலவியது. இரவு 10 மணி அளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. விட்டுவிட்டு பெய்த மழையினால் இப்பகுதியில் உள்ள கசிவுநீர் குட்டைகள் நிரம்பியதுடன்,
பாசனப் பயன்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் மழைநீர் தேங்க தொடங்கியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் பெய்த இந்த மழையால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் வரும் நாள்களில் இதுபோன்று பலத்த மழை பெய்யும் நிலையில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.