சேலம் கன்னங்குறிச்சியில் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர் மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சேலம் கன்னங்குறிச்சி கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (42). ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர். இவருடைய மனைவி காயத்ரி. இந்தத் தம்பதிக்கு ஆல்வின்(17) என்ற மகனும், பிரியா என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு 7.30 மணி அளவில் பார்த்திபன் வீட்டில் தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 40 வயதுடைய நபர் ஒருவர் பார்த்திபனை வீட்டை விட்டு வெளியே வருமாறு அழைத்துள்ளார்.
அதைத்தொடர்ந்து யார் என கேட்டு வெளியே வந்த பார்த்திபனுடன், அந்த நபர் வாய்த்தகராறில் ஈடுபட்டார். பின்னர் அந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பார்த்திபனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார்.
உடனே, சத்தம் கேட்டு வெளியே வந்த பார்த்திபனின் குடும்பத்தினர், காயமடைந்த அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
இது குறித்து கன்னங்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்த்திபனின் சகோதரர் அருள்சாமி தாயம் விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் சத்தியபிரகாஷ் என்பரை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் வகையில் பார்த்திபன் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.