தமிழக முதல்வரின் புகைப்படத்தை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) கேலியாகச் சித்திரித்தவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புகைப்படத்தை கேலியாகச் சித்திரித்து கட்செவி அஞ்சலில் பரப்பி வருவதாக, வீரபாண்டி ஒன்றிய அதிமுக செயலர் வரதராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜனிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக, விசாரிக்க, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போலியாக அவரது படத்தைச் சித்திரித்து, கட்செவி அஞ்சலில் பரப்பியதாக மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இப் படத்தைப் பரப்பியவர்களைக் கண்டறிய, சென்னை சைபர் க்ரைம் போலீஸார் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த மர்ம நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.