விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் கொங்கணாபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோக் குமார் தலைமை வகித்தார். சங்ககிரி கோட்டாட்சியர் ராமதுரை முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, நகர்புறங்களில் சிலை அமைத்திடும் குழுக்கள் அதற்கான முழு விவரங்களையும், சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் முன்னதாக சமர்பிக்க வேண்டும், சிலைகள் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் அமைத்திட வேண்டும், எடப்பாடி சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்படும் சிலைகளை எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரிக்கரை, கல்வடங்கம் பரிசல்துறை ஆகிய இடங்களை மட்டுமே விசர்ஜனம் செய்திட வேண்டும்,
விநாயகர் சிலை அமைத்திட அனுமதி கோரி விண்ணப்பித்த குழுக்கள் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், செல்வம் உள்ளிட்ட பல்வேறு நிலைய காவல் அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.