மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியால் வியாபாரம் பாதிப்பு காரணமாக வேலையிழந்துள்ளதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து சேலத்தில் சுமைப் பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்ட அனைத்து சுமைப்பணி தொழிற்சங்கங்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் கோவிந்தன் தலைமை வகித்தார். சம்மேளனத்தின் மாநிலப் பொதுச்செயலர் வெங்கடபதி சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, 55 கிலோ வரையிலான மூட்டைகளை அனுமதிக்க வேண்டும், சுமைப் பணி நடைபெறும் இடங்களில் ஓய்வறை அமைத்திட வேண்டும். சுமைப் பணி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.
இதுதொடர்பாக வெங்கடபதி கூறியது:
சுமைத் தூக்கும் தொழிலாளர்களுக்கு 100 சதவீதம் பணப் பரிவர்த்தனை மூலமே கூலி வழங்கப்பட்டு வரும் நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு கூலி வழங்குவதில் சிரமம் உள்ளது. இந்தநிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் சிறுவியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கொள்முதல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சுமைப்பணி தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சுமைப் பணி தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.