சேலம் மாவட்டம், வாழப்பாடியில் பழுதடைந்து நின்ற தனியார் பேருந்து மீது அரசு விரைவுப் பேருந்து மோதியதில் கேரளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இறந்தார். 12 பயணிகள் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் சொகுசுப் பேருந்து, வியாழக்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி புறவழிச்சாலை மேம்பாலத்தில் பழுதடைந்து சாலையோரத்தில் நின்றது.
அப்போது அதே திசையில் வந்த அரசு விரைவுப் பேருந்து, பழுதடைந்து நின்ற தனியார் சொகுசுப் பேருந்து மீது மோதி, 30 அடி துôரத்திற்கு இழுத்துச் சென்றது. இந்த விபத்தில், தனியார் பேருந்தில் வந்த, கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (21) இறந்தார். சென்னை வில்லிவாக்கத்தில் தங்கி தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், சகோதரியின் திருமணத்துக்காக கேரளத்துக்கு சென்றுகொண்டிருந்தார்.
அரசு மற்றும் தனியார் பேருந்தில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் (30). கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த கிரிஸ்மா(23), அருண்(30), உத்தரபிரதேசத்தை சேர்ந்த மூவின் (23), திருநெல்வேலியை சேர்ந்த கார்த்திகா (27), முகமதுமாவுத் (21) ஆகியோர் உள்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து தனியார் சொகுசுப் பேருந்து ஓட்டுநர் ஜோன்ஸ் கொடுத்த புகாரின்பேரில், அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநரான, நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (46) மீது, வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.