சங்ககிரி வட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
ஆர்ப்பாட்டத்துக்கு சங்ககிரி கிளைத் தலைவர் பிரேமா தலைமை வகித்தார். அரசு ஊழியர்கள் சங்க சங்ககிரி வட்டக்கிளை செயலர் கே.ஏ.பசுபதி, கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்க சேலம் மாவட்டத் தலைவர் பி.பழனிவேல், செயலர் டி.ராஜேஷ், சமூக நலப்பணியாளர் சங்க மாவட்டச் செயலர் வி.விஜயகுமார், செவிலியர்கள் சங்க மாவட்ட நிர்வாகி மனோன்மணி, அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகிகள் கே.எஸ்.ஜெயஷீலா, ஷர்மிளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு புதுச்சேரி அரசு வழங்குவது போல் இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்கி காலமுறை ஊதியத்துக்குள் கொண்டுவர வேண்டும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும், 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஊதியக்குழு நிலுவைத்தொகையை ரொக்கமாக வழங்கவேண்டும், மே மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.