பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சேலத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் தலைமை அஞ்சல் நிலையம் முன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில துணைத் தலைவர் கோவை உமர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இதில் இரா.முத்தரசன் பேசுகையில், பாபர் மசூதி இடிப்பு கண்டனத்துக்குரியது. மதச்சார்பற்ற கொள்கைகளை பின்பற்றி வாழ்வதுதான் நம் நாட்டின் அடையாளம். அனைவரும் நாட்டுக்காக மத நல்லிணக்கத்தோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
அதேபோல, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் முகமது ரபீக், பொதுச் செயலர் அப்சர் அலி உள்ளிட்டோர் பேசினர்.
இதனிடையே, சேலம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக மனிதநேய ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள் சாதிக்பாஷா, பொருளாளர் அமீர் உசேன், சையத் முஸ்தபா உள்ளிட்ட 75 பேரை போலீஸார் கைது செய்தனர்.