வாழப்பாடியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

வாழப்பாடியில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்துவந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் புதன்கிழமை அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. 

வாழப்பாடியில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்துவந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் புதன்கிழமை அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. 
வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே பிரதான கடைவீதி அமைந்துள்ள கடலூர் சாலையில் 50-க்கும் மேற்பட்டோர் கூரை கொட்டகை அமைத்து ஆக்கிரமித்து,  காய்கறி, பழக்கடைகள் நடத்தி வந்தனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.  
அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள்,  வாகன ஓட்டுநர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். எனவே, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, போக்குவரத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 இதனையடுத்து, போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தி வந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை, வாழப்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி தலைமையில்,  வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர், பேரூராட்சி செயல்அலுவலர் கணேஷ் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர்.
நீண்ட நாள்களாக போக்குவரத்துக்கும் பயணிகளுக்கும் இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி மண்மேடுகளை சீரமைத்து,  போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தியதால், அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுமக்களின் நலன் கருதி, வாழப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகள் அகற்றப்பட்டு,  ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் உதவியோடு தடுப்புகள் அமைத்து, கடலூர் சாலையில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் நலன் கருதி நிழற்குடை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என,  பேரூராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com