ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி முடிக்க வலியுறுத்தி, சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைந்தபட்ச சம்பளமாக ரூ.18,000 என்பதை உறுதிப்படுத்த வேண்டும், 2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ சம்மேளனத் துணைத் தலைவர் அருணகிரிநாதன், பொதுச் செயலர் செல்வகுமார், மத்திய சங்க நிர்வாகி செந்தில்குமார், கார்த்திகேயன், எல்.பிஎஃப். நிர்வாகி பாலகிருஷ்ணன், அம்பேத்கர் தொழிற்சங்க நிர்வாகி ஆறுமுகம், தேமுதிக நிர்வாகி செல்வமணி, ஏஐடியூசி முருகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.