அரசு செவிலியர் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவிகள் 40 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
சேலம் இரும்பாலை சாலையில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரிக்கு அருகிலேயே செவிலியர் கல்லூரியும், விடுதியும் செயல்பட்டு வருகின்றன. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு விடுதியில் மாணவிகளுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டுள்ளது. இதை சாப்பிட்ட சிலருக்கு வியாழக்கிழமை அதிகாலை முதல் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இதையடுத்து, உடல்நலம் சீரான மாணவிகள் மீண்டும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில், 15 பேர் மட்டும் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுதொடர்பாக, விடுதி சமையல் ஒப்பந்ததாரரிடம் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.