ஊதியஉயர்வு வழங்கக் கோரி, சேலத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஊதிய மாற்றம் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஊதியஉயர்வு வழங்கப்படாது என்றும், நாடு முழுவதும் உள்ள 1.30 லட்சம் டவர்களை பிரித்து, தனி நிறுவனம் அமைத்து தனியார்மயத்துக்கு வழிவகுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தைக் கண்டித்து, நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை இரு நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், சென்னையில் 8 ஆயிரம் ஊழியர்களும், தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
சேலம் மண்டலத்தில் சுமார் 1,500 ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் இயங்கவில்லை. அதேபோல, செல்லிடப்பேசி மற்றும் சாதாரண தொலைபேசி கட்டணம் செலுத்த முடியவில்லை. பழுது பார்க்கும் பணியும் நடைபெறவில்லை.
ஆனால், பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி மற்றும் தொலைபேசி சேவை தடையின்றி வழக்கம் போல செயல்படும் என பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.