வாழப்பாடி பகுதியில் பயன்படுத்த முடியாத அளவில் பழுதடைந்து, எந்நேரத்திலும் சரிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களை அகற்றக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி ஒன்றியத்தில் 11 நடுநிலைப் பள்ளிகள் உள்பட மொத்தம் 62 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், 240 ஆசிரிய-ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஏறக்குறைய 5,000 மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர்.
பள்ளிக் கட்டடங்கள் பெரும்பாலும், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. வாழப்பாடி, வாழப்பாடி காலனி, அத்தனூர்பட்டி, சோமம்பட்டி, பேளூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடங்கள் பயன்படுத்த முடியாத அளவில் பழுதடைந்துள்ளன.
எந்நேரத்திலும் சரிந்து விழுந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் நிலவுவதால், அக்கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென, பள்ளிக் கிராம கல்விக்குழு, பெற்றோர்-ஆசிரியர்கள் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக தீர்மானங்கள் நிறைவேற்றி, உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில், கடந்த 5 ஆண்டுகளில் பலமுறை கோப்புகளை அனுப்பியுள்ளது.
ஆனால், பழுதடைந்த கட்டடங்களை இடித்து அகற்றிட இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பழுதடைந்துக் கிடக்கும் அனைத்துக் கட்டடங்களையும் அப்புறப்படுத்த ஊரக வளர்ச்சி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது.