ஓமலூர் அருகே கொள்ளை நாடகமாடி ரூ.35 லட்சம் மதிப்பிலான ஜவுளியைக் கடத்தி விற்க முயன்றதாக, 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட குமாரபாளையம் அருகேயுள்ள கட்டிபாளையத்தைச் சேர்ந்த ராஜூ, லாரி தொழில் செய்து வருகிறார்.
இவரிடம், வேலூர் மாவட்டம் மலைக்கோடி நகரைச் சேர்ந்த குணசேகரன் (48),, அக்ரகாரத்தைச் சேர்ந்த உலகநாதன் ஆகிய இருவரும் ஓட்டுநர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்குச் செல்வதற்காக லாரியில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகளை ஏற்றிகொண்டு இருவரும் புறப்பட்டுள்ளனர்.
ஓமலூர் வந்தபோது லாரி பழுதடைந்து விட்டதாக, லாரி உரிமையாளர் ராஜூக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், லாரி பழுதடைந்த இடத்தில் இல்லாமல் வேறு பகுதிக்கு நகர்வதை ஜி.பி.எஸ். கருவியில் கண்காணித்த ராஜூ ஓமலூருக்கு வந்து, போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் லாரி நிற்பதை அறிந்த போலீஸார், அங்கே சென்றபோது, ஜவுளி பேல்கள் இரு லாரிகள், டெம்போவில் ஏற்றி கடத்தப்பட இருந்தது தெரியவந்தது.
இதன்பின்னர், வாகனங்கள், ஜவுளியை போலீஸார் காவல் நிலையம் கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது துணி பேலுடன் கூடிய லாரி கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடி, கடத்தி விற்பனை செய்யத் திட்டமிட முயன்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, ஓட்டுநர் குணசேகரன், திருச்செங்கோடு பழனிவேல் (49), சென்னிமலை விஜயகுமார் (34), ஈரோடு முரளிபாபு (48), சேலம் அன்னதானப்பட்டி சீனிவாசன் (43), ஓமலூர் சுந்தர்ராஜன் (49), மல்லூர் சேகர் (43), அன்னதானப்பட்டி பாஸ்கர் (37) ஆகிய 8 பேரையும் ஓமலூர் போலீஸார் கைது செய்தனர்.