சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம், ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஏற்காட்டுக்கு ஏராளமானோர் சுற்றுலா வந்திருந்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள், கர்நாடகம், கேரளத்திலிருந்தும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
கார்கள், இரு சக்கர வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்ததால் படகு இல்லம் பகுதி முழுவதும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததை காணமுடிந்தது. ஏற்காட்டுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரி பூங்கா, மான் பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், லேடி சீட், தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, பக்கோட காட்சி முனைப் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளை காணமுடிந்தது. வாகனங்களை நிறுத்துவதற்கென தனியாக இடம் ஒதுக்காததால் சாலைகளில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மார்கழி மாதம் என்பதால் பனி மூட்டம், பனிப் பொழிவு காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேட்டூர் அணை பூங்காவில் குவிந்தனர் சுற்றுலாப் பயணிகள்
மேட்டூர், ஜன.1: புத்தாண்டு தினத்தையொட்டி மேட்டூர் அணை பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் 8 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் முக்கிய இடமாக மேட்டூர் அணை உள்ளது. சாதாரண நாள்களிலேயே இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள்.
இந்த நிலையில் புத்தாண்டு மற்றும் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாகக் காணப்பட்டது. அதிகாலை முதலே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக மேட்டூர் அணை பூங்காவுக்கு வரத் தொடங்கினர். பிற்பகலில் பூங்காவில் அதிக அளவில் கூட்டம் இருந்தது. கார்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் ஏராளமானோர் வந்து சென்றனர். காவிரி ஆற்றில் நீராடிவிட்டு, அணைக்கட்டு முனியப்பன் சுவாமியைத் தரிசித்த சுற்றுலாப் பயணிகள், அணை பூங்கா சறுக்கலில் விளையாடியும், ஊஞ்சலாடியும் மகிழ்ந்தனர்.
அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் 8,162 பேர் வந்து சென்றுள்ளனர். இவர்கள் மூலம் பார்வையாளர்கள் கட்டணமாக ரூ.40,810 வசூலாகி உள்ளது. மேட்டூர் அணையின் பவள விழா கோபுரத்திலிருந்து அணையின் அழகை ஏராளமானோர் பார்த்துச் சென்றனர். அதன் மூலம் பார்வையாளர்கள் கட்டணமாக ரூ.4,950 வசூலாகி உள்ளது.