ஓமலூர் பகுதியிலிருந்து வெள்ளைக்கல்லை வெட்டி எடுத்து ஒடிஸாவுக்கு கடத்த முயன்றதாக மூன்று டாரஸ் லாரிகளை கனிமவளத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
சேலம் ஆட்சியர் வா.சம்பத்துக்கு, வெள்ளைக்கல்லை வெட்டிக் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கனிமவளத் துறை அதிகாரிகளைச் சோதனை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள், ஓமலூர் சுங்கச்சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது வெள்ளைக்கற்களைக் கடத்திச் சென்ற மூன்று டாரஸ் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் விலை உயர்ந்த வெள்ளைக்கல்லை, சட்டவிரோதமாக வெட்டி ஒடிஸாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, மூன்று டாரஸ் லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளைக்கல் மற்றும் மூன்று லாரிகளின் மதிப்பு சுமார் ரூ.65 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது வெள்ளைக்கற்களை வெட்டிக் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.