ஓமலூர் வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து சட்டவிரோத செயல்கள் மற்றும் வழிப்பறி செய்து வந்த ரெளடிகள் 8 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் உள்கோட்ட காவல் நிலையப் பகுதிகளில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனை, சட்டவிரோதமாக மதுபானக் கடைகள், வழிப்பறி, பொதுமக்களை மிரட்டுதல் போன்ற செயல்களில் சிலர் தொடர்ந்து செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜனுக்கு புகார்கள் சென்றன.
இதனைத் தொடர்ந்து, அவர்களை கண்காணித்து கைது செய்ய ஓமலூர் உள்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி, தாரமங்கலம் பகுதியில் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பாரகல்லூர் பெருமாள், நந்தகுமார், தாரமங்கலம் முத்துகுமார், துட்டம்பட்டி செல்வம், பவளத்தானூர் குமரவேல், ஓமலூ ஜெமினி, சுரேஷ், சரவணன் ஆகிய எட்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.