வாழப்பாடி அருகே மனைவியை பலாத்காரம் செய்ததாக கேரள இளைஞரை கொலை செய்த வழக்கில் தொழிலாளியை , காரிப்பட்டி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
அயோத்தியாப்பட்டணம் அடுத்த அக்ரஹார நாட்டாமங்கலம் ஏரியில், கடந்த 26-ஆம் தேதி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் உடலைக் கைப்பற்றி, போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொலை செய்யப்பட்டவர் அணிந்திருந்த காவி நிற உடை, துளசி மணி மற்றும் அவரது சட்டைப்பையில் இருந்த முகவரி அட்டை ஆகியவற்றை வைத்து, இறந்து கிடந்தவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ( எ ) நந்தகுமார் (43) என்பது தெரியவந்தது. அவரது உறவினர்களை வரவழைத்து உறுதி செய்த போலீஸார், சேலம் அரசு மருத்துவமனையில் உடலைப் பிரேத பரிசோதனை செய்து ஒப்படைத்தனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த நந்தகுமார், வாழப்பாடியை அடுத்த சின்னமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தனியார் பேக்கரியில் வேலை செய்து வரும் தொழிலாளியான கோவிந்தன்(39) என்பவரது வீட்டுக்கு சென்று, சுகவீனமாக இருந்த அவரது 19 வயது மகன் குணமடைய பரிகார பூஜை செய்து கொடுப்பதாகக் கூறியுள்ளார். கோவிந்தன் குடும்பத்தினர், நந்தகுமாரை தங்க வைத்து பூஜை செய்துள்ளனர். அப்போது கோவிந்தன் மனைவியைப் பலாத்காரம் செய்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த கோவிந்தன், நந்தகுமாரை தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடலை அக்ரஹார நாட்டாமங்கலம் ஏரியில் போட்டு, எரித்து விட்டு சென்றது தெரியவந்தது. அதனையடுத்து, கோவிந்தனை காரிப்பட்டி போலீஸார் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.