வாழப்பாடி அருகே இரு சக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறும்பட இயக்குநர் உயிரிழந்தார்.
வாழப்பாடியை அடுத்த கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன்(25).
குறும்பட இயக்குநராக சென்னையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சந்தியா (20) என்ற மனைவியும், மூன்று மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு வாழப்பாடியில் இருந்து கம்மாளப்பட்டிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பொன்னாரம்பட்டி அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து அவரது தாய் போதையம்மாள் அளித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.