சேலம் அங்கம்மாள் காலனி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை திராவிட விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடக்கி வைத்தார். குடியுரிமை பாதுகாப்பு நடுவம் மாநிலக் குழு உறுப்பினர் ஹரிபாபு தலைமை வகித்தார். விடியல் பெண்கள் மைய அமைப்பாளர் தமயந்தி, அம்பேத்கர் அமைப்பு சாரா தொழிற்சங்க மாநிலத் தலைவர் அரங்க.செல்லதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், அங்கம்மாள் காலனி நிலத்தை சீனிவாச குப்தா என்பவர் தானமாக வழங்கினார். தற்போது அவரது வாரிசுகள் நிலத்தை திருப்பி கேட்டு வருகின்றனர். அங்கம்மாள் காலனி பகுதி மக்களுக்கு அதிகாரிகள் பட்டா வழங்க முன்வந்தால் அதை அவர்கள் தடுக்கின்றனர்.
எனவே அங்கம்மாள் காலனி மக்களின் துயர் துடைக்க தமிழக அரசு அந்த இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.