காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 1,137 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழக -கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு வனப் பகுதி மற்றும் காவிரி ஆற்றின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வறண்டு கிடந்த காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து தொடங்கியுள்ளது. காவிரியின் துணை நதியான பாலாற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மேட்டூர் அணைக்கு நொடிக்கு 100 கன அடிக்கும் குறைவாகவே இருந்த நீர்வரத்து, தற்போது 1,137 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 1021 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது வெள்ளிக்கிழமை காலை 1,137 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
குடிநீர்த் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 20.35 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 4.20 டி.எம்.சி.