அகில இந்திய அளவில் 15 சதவீத கல்லூரிகள் மட்டுமே மத்திய அரசின் தேசிய தர நிர்ணயம் அந்தஸ்தை பெற்றுள்ளதாக, பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்.பாலகுருநாதன் தெரிவித்தார்.
தருமபுரி மண்டலக் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சார்பில், கல்லூரி முதல்வர்களுக்கான விழிப்புணர்வுப் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை ஓமலூர் அருகேயுள்ள பத்மவாணி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வித்துறை இணை இயக்குநர் நடராஜன் தலைமை வகித்தார்.
இதில், பெரியார் பல்கலைக்கழகத் தேசிய தர நிர்ணயக்குழு ஒருங்கிணைப்பாளரும், நுண்ணுயிரியல் துறைத் தலைவருமான பேராசிரியர் ஆர்.பாலகுருநாதன் பேசியது.
இந்தியா முழுவதும் 39 ஆயிரம் கல்லூரிகள், 799 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீத கல்வி நிறுவனங்கள் மட்டும் தேசிய தர நிர்ணய அந்தஸ்து பெற்றுள்ளன. பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் அரசுக் கல்லூரிகள் உள்பட 92 கல்லூரிகள் இணைவு பெற்றுள்ளன. தொடங்கி, 6 ஆண்டுகளைக் கடந்த கல்லூரிகள் தேசிய தர நிர்ணய அந்தஸ்து பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்கு 70 கல்லூரிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், இதுவரை 15 கல்லூரிகள் மட்டுமே தேசிய தர நிர்ணய அந்தஸ்து பெற்றுள்ளன.மீதமுள்ள கல்லூரிகளும் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில், பத்மவாணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.சத்தியமூர்த்தி, அரசு கலைக் கல்லூரி முதல்வர் மா.சகுந்தலா, கந்தசாமி கண்டர் கல்லூரி முன்னாள் முதல்வர் எம்.சி.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.