தாரமங்கலத்தில் டாஸ்மாக் மதுக்கடையில் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள கங்காணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் சிவசங்கர் (27). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகேயுள்ள ஒரு கல்குவாரியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை தாரமங்கலம் வந்திருந்த சிவசங்கர், அங்குள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மூன்று 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மது வாங்கியுள்ளார். அவர் கொடுத்த ரூபாய் நோட்டுகள் மூன்றும் லேசாக இருந்ததால் விற்பனையாளர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் கொடுத்த 100 ரூபாய் நோட்டுகள் கள்ள ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்துள்ளது .இதனால், சந்தேகமடைந்த விற்பனையாளர், தாரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீஸார், அந்த இளைஞரைப் பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 27 இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கள்ள நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, ஓமலூர் பகுதியில் கள்ள ரூபாய் நோட்டுகள் பரிமாற்றம் நடைபெறுகிறதா என்பது குறித்து தனிப்பிரிவு போலீஸார் ரகசியமாக விசாரணை துவங்கியுள்ளனர். மேலும், ஒசூர் பகுதிக்குச் சென்று கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறித்து விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.