சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் மின்வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் முகாமில், பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியது: சேலம் மாநகராட்சி பொன்னம்மாபேட்டை ரயில்வே லைன் வடக்கு தெரு பகுதியில் சுமார் 200- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த பல ஆண்டுகளாக வசித்து வரும் இந்தப் பகுதி மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வருகிறோம்.
குறிப்பாக, மின்வசதி, கழிப்பிட வசதிகள் இல்லாததால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி உள்ளோம். மேலும், கழிப்பிட வசதி இல்லாததால் அருகே உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதே நிலை நீடித்தால் அடுத்தகட்டமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளோம் என்றனர்.