சேலத்தில் புதன்கிழமை (நவ.15) முதல் 33-ஆவது தேசிய புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.
சேலம் போஸ் மைதானத்தில் காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.ராஜன் கண்காட்சியைத் திறந்து வைக்கிறார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி முதல் விற்பனையைத் தொடக்கி வைக்கிறார். மாவட்ட நூலக அலுவலர் வே.மாதேஸ்வரன் முதல் விற்பனையைப் பெறுகிறார்.
கண்காட்சியில் நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அகாதெமி, அம்பேத்கர் பவுண்டேஷன் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள நூல்கள் இடம்பெறும்.
இக் கண்காட்சியில் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும், பள்ளி, கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும்.
இதில், மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் தலைமை வகிக்கிறார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சண்முகம் சரவணன், மண்டல மேலாளர் அ.கணேசன், டி.சத்தியசீலன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.