பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பளித்து, அவர்களது நெறிமுறைகளைக் கடைப்பிடித்தால், மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை வளமாகும் என வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு விழாவில் பால் பண்ணை தொழிலதிபர் கோபால்சுவாமி அறிவுரை வழங்கினார்.
வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், கல்வி விழிப்புணர்வு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் முத்துசாமி வரவேற்றார். பள்ளி சுற்றுச்சுவரை ரூ.2.25 லட்சம் செலவில் புதுப்பித்து கொடுத்த வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி எஸ்.கே.ஏ., அர்ஜுனா பால் பண்ணை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கோபால்சுவாமிக்கு, முன்னாள் தலைமையாசிரியர் சுந்தரமூர்த்தி மாணவ-மாணவியர் சார்பில் நினைவுப் பரிசு வழங்கினார்.
விழாவில், பால் பண்ணை தொழிபதிபர் பேசுகையில், கிராமப் புற மாணவ-மாணவியர் திறமை மிகுந்தவர்களாக விளங்குகின்றனர். மேலும் தனித் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பளித்து, அவர்களது நெறிமுறைகளைக் கடைப்பிடித்தால் எதிர்கால வாழ்க்கை வளமாகும் என மாணவ-மாணவியருக்கு அறிவுரை வழங்கினார். அதனையடுத்து, பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன. ஆசிரியர் சேகர் நன்றி கூறினார்.