மேச்சேரி அருகே மணல் கடத்தலில் பிடிபட்ட ஓட்டுநர், மணல் லாரியுடன் மாயமானது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மேச்சேரி அருகே வெள்ளார் கிராமத்தில் மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் ஆர்.பாக்யராஜுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கடந்த 9-ஆம் தேதி கிராம உதவியாளர்முருகனுடன் பாக்கியராஜ் குண்டல்பள்ளம் பகுதியில், அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டார். பின்னர் மேச்சேரி காவல் நிலையத்துக்கு லாரியை எடுத்துச் செல்ல போலீஸாருக்கு தகவல் அளித்தார். போலீஸார் வர தாமதமான நேரத்தை பயன்படுத்தி, ஓட்டுநர் மணி லாரியுடன் அங்கிருந்து வனப் பகுதி வழியாக தப்பிச் சென்றார். லாரியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மேச்சேரி போலீஸில் மணல் லாரியுடன் தப்பிச் சென்ற தருமபுரி மாவட்டம், கம்மம்பட்டியைச் சேர்ந்த மணி மீது நடவடிக்கை எடுக்குமாறு பாக்கியராஜ் புகார் அளித்தார்.