மேட்டூர் அருகே மணல் கடத்தலைத் தடுக்க, இருமாநில எல்லையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேட்டூரை அடுத்துள்ள காரைக்காட்டில் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள இப் பகுதியில் போலீஸ் சோதனைச் சாவடி அமைத்தும் மணல் கடத்தலைத் தடுக்க முடியவில்லை.
இதனால், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின் பேரில், இரு மாநில எல்லையான காரைக்காட்டில் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். வருவாய்த் துறையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, கடத்தல்காரர்கள் காவிரிக் கரையில் பதுக்கி வைத்திருந்த மணலை போலீஸார் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, பல லட்சம் மதிப்பிலான மணலை பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளனர்.
ஏலம் எடுக்க குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே பொதுப்பணித் துறையினர் அனுமதி அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இந்த மணலை அரசு ஒதுக்கீட்டில் இலவச வீட்டுமனை மற்றும் கழிப்பிடம் கட்டும் கிராம வாசிகளுக்கு வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப் பகுதியில் போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.