மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் ஜூன் 12 -ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. அக்டோபர் 2 -ஆம் தேதி சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 3,500 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், சில பகுதிகளில் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கவில்லையென விவசாயிகள் புகார் கூறியதால், திங்கள்கிழமை இரவு முதல் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,884 கன அடியாகச் சரிந்தது. பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்ததால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 84.83 அடியாகக் குறைந்தது. அணையின் நீர் இருப்பு 46.93 டி.எம்.சி.