எடப்பாடியை அடுத்த கச்சுப்பள்ளி கிராமத்தில் புதன்கிழமை வருவாய்த் துறை சார்பாக மனு நீதி முகாம் நடைபெற்றது.
முகாமை திட்டக்குழுத் தலைவர் கரட்டூர் மணி தொடக்கிவைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சங்ககிரி கோட்டாட்சியர் டி.ராமதுரைமுருகன் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் விவசாயிகளுக்கு இலவச இடுபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினர். எடப்பாடி வட்டாட்சியர் கேசவன், செல்வகுமார், வட்ட வழங்கல் அலுவலர் மாணிக்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.