சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலாப் பகுதியில் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராமதாஸ் ஆய்வு நடத்தினார்.
ஏற்காடு சுற்றுலாத் தலத்தை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படைத் தேவைகள், சுத்தமான குடிநீர் மற்றும் பொது சுகாதாரம், கழிப்பறை வசதிகள் சுற்றுலாப் பகுதிகள் தூய்மையாக இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க உத்தரவிட்டார்.
ஏற்காடு படகு இல்லம் மற்றும் மான் பூங்காவை பார்வையிட்ட பின், குழந்தைகள் இயற்கை அழகை கண்டு மகிழ மூங்கில் வீடுகள் அமைக்குமாறும், நடைபாதை, கூடுதல் இருக்கைகள், மலைவாழ் மக்கள் சுயஉதவிக் குழுக்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு சிற்றுண்டி வழங்கவும் ஆலோசனை வழங்கினார். பின் அண்ணா பூங்காவில் தோட்டக் கலை அதிகாரிகளுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படைத் தேவைகள், பூங்காவை அழகுபடுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
சேர்வராயன் கோயில் மற்றும் லேடிசீட் பகுதிகளில் பார்வையிட்டு, அப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்ய உத்தரவிட்டார். படகு இல்ல ஏரியைச் சுற்றி நடைபாதை அமைக்க வரைவுத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்காடு சுற்றுலாத் தலத்தில் சாலையோரக் கடைகளுக்கு மாற்று ஏற்பாடாக, அரசு கடைகள் அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.