வாழப்பாடியை அடுத்த ஏ.குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆங்கில பாடம் சார்ந்த படைப்புகள் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்த பள்ளி மாணவ- மாணவியரின் ஆங்கில திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆங்கில கண்காட்சி நடைபெற்றது. இதில் 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் ஆங்கிலப் பாடம் சார்ந்த தலைப்புகளின் அடிப்படையில், பல்வேறு படைப்புகளை வடிவமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர்.
அதுமட்டுமின்றி, புவி வெப்பமயமாதல் விளைவை விளக்கும் சுற்றுச்சூழல் கோலம், சுனாமியின் பாதிப்பை விவரிக்கும் சுனாமிகா பொம்மைகள், 50 ஆங்கில எதிர்ச்சொல் அடங்கிய மெகா விளக்கு வடிவம் ஆகியவற்றையும் காட்சிக்கு வைத்திருந்தனர். காடுகளின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் வனத்தை சித்தரித்தும் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.
பெத்தநாயக்கன்பாளையம் உதவித் தொடக்க கல்வி அலுவலர் மாலதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராணி ஆகியோர் பார்வையிட்டு மாணவ, மாணவியரை பாராட்டினர். பாலாஜி வன்பொருள் நிறுவனம் சார்பில், 70 மாணவ, மாணவியருக்கு ஆங்கில அகராதி பரிசாக வழங்கப்பட்டது. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளித் தலைமையாசிரியர் கனகாம்பரம், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியை வனிதாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.