டெங்கு தடுப்பு: போர்க்கால அடிப்படையில் பணியாற்ற வேண்டும்: கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா

டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா அறிவுறுத்தினார்.

டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா அறிவுறுத்தினார்.
 சேலம் மாவட்டம் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் புதன்கிழமை
 நடைபெற்றது.
 இக்கூட்டத்துக்கு ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் முன்னிலை வகித்தார்.
 இதில் கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ்ராஜ்வர்மா பேசியது:
 தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மேம்பாட்டுப் பணிகளுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பருவநிலை மாற்றத்தின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளுவது தொடர்பான நடவடிக்கைகளையும் அரசு துரிதப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில் சேலம் ஊரக பகுதிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள பொது சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவ அலுவலர்கள் செவிலியர்கள், மலேரியா தடுப்பு களப்பணியாளர்கள், கொசுப்புழுவை கண்டறிந்து அகற்றுபவர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து, தொய்வின்றி பணியாற்றிட வேண்டும். தாங்கள் மேற்கொள்ளுவது பணி என்று பாராமல் பிற உயிர்களைக் காப்பாற்றும் பணி என்பதை கருத்தில் கொண்டு, அனைவரும் பணியாற்றிட வேண்டும்.
 மேலும் பருவநிலை மாற்றத்தின் போது, தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதோடு, பொதுமக்களிடையே நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்த விவரங்களை, தெளிவாக விளக்கிட வேண்டும்.
 குறிப்பாக டெங்கு தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி, பொதுமக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். அனைத்து துறைகளோடு ஒருங்கிணைந்து தீவிர தொற்று நோய் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு மட்டுமல்லாமல், துறைகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றங்கள் தொய்வின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்.
 களப் பணிகளில் அரசுத் துறைகள் மட்டுமல்லாமல் , ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் மற்றும் பிற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்களை ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர், உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 பொதுமக்களிடையே நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களின் ஒத்துழைப்பையும் பெற்று, பொதுமக்களையும் இப்பணிகளில் ஈடுபடுத்திட, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் முன்வரவேண்டும் என்றார்.
 கூட்டத்தில் செயற்பொறியாளர் அசோகன், இணை இயக்குநர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை எஸ். உமா, துணை இயக்குநர் பொது சுகாதாரம் கே. பூங்கொடி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) என். கோபிநாத், உதவி ஆணையர்கள் ப.ரமேஷ் பாபு, நா. சத்திய நாராயணன், மு. கணேசன், ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ், மருத்துவ அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com