சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசின் மாநில மரமான பனை விதைகளை விதைப்பதில், பொதுமக்களுடன் இணைந்து வாழப்பாடி பசுமை இயக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுற்றுச்சூழல் பாதிப்பினால் நீர், நிலம், காற்று மாசுபடுகிறது. மரங்களை வெட்டிக் காடுகளை அழிப்பதினால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மரங்களை நட்டு பராமரிக்கவும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும், அமைப்பினரும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சேலம் மாவட்டம், வாழப்பாடியை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து, வாழை பசுமை இயக்கம் என்ற பெயரில் இயக்கத்தை துவக்கி, சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில், மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அக்குழுவைச் சேர்ந்த தேவா, முஸ்தபா, அப்பு, செந்தில்நாதன் உள்ளிட்ட இளைஞர்கள், பொதுமக்களுடன் இணைந்து கடந்த இரு தினங்களாக வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் ஏரிக்கரை பகுதியில், தமிழகத்தின் மாநில மரமாக குறிப்பிடப்படும் பனை விதைகளை விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழைக்காலம் முடிவதற்குள் ஆயிரம் பனை விதைகளை விதைக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.