தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி துணைப் பதிவாளரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
சங்கத்தின் துணைத் தலைவர் பொன்னுசாமி, சங்க இயக்குநர்கள் ஜோதி, ஜக்கியா, பாலம்மாள் உள்பட 8 பேர் சேர்ந்து ஆத்தூரிலுள்ள துணைப் பதிவாளர் அறிவழகனிடம் இந்த மனுவை அளித்தனர். அதில் கடன் சங்கத்தின் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தருவதற்கு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் தலைவர் பழனிசாமி பிரச்னையை உருவாக்குவதாகத் தெரிகிறது.
அவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் எனவே, அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர அனுமதி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:
ஊழியர்களுக்கு சம்பளம், போனஸ் போடப்பட்டு விட்டது. அதேவேளையில் தலைவர் மீது புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளதால் விசாரணை செய்ய அதிகாரிகள் நேரில் வருவர் என்றார்.