தமிழக மீனவர் பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.
சேலத்தில் பா.ம.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் கூறியது:
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடிப்பதும், மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைப்பதும் தொடர் கதையாக உள்ளது.
தற்போது காரைக்கால் மீனவர்களை கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது அக்கறை கொள்ளாத இலங்கை அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுவதைத் தடுக்க மத்திய அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. டெங்குவைக் கட்டுப்படுத்த ஏன் முடியவில்லை? சுகாதாரத் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும். டெங்குவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையைப் போக்க வேண்டும்.
மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் சுகாதாரம் உள்பட மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டிருக்கும். உள்ளாட்சி அதிகாரிகளுக்கு அதிக வேலை இருப்பதால் சுகாதார பணிகளை முழுமையாக செய்ய முடியாது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. கெயில் நிறுவனம், விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் எரிவாயு குழாய்களை பதிக்க வேண்டும் என்று தொடர்ந்து பா.ம.க. வலியுறுத்தி வருகிறது என்றார்.