சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த இரு நாள்களில் மட்டும் காய்ச்சல் மற்றும் இதய நோய் காரணமாக அடுத்தடுத்து 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக நாளொன்றுக்கு 400 பேருக்கு மேல் வந்து செல்கின்றனர்.
இதில், தீவிர காய்ச்சல் பாதிப்புள்ளவர்கள் மட்டும் கண்டறியப்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சனா என்ற 5 மாதக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
மேலும், இதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த பவன்குமார் (2), அப்பாதுரை மகன் ஸ்டீபன்ராஜ் (2) ஆகியோர் உயிரிழந்தனர். இதனிடையே, வியாழக்கிழமை கார்த்திகாயினி என்ற 5 வயது குழந்தை காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது.
இந்த நிலையில், இரண்டு நாள்களில் அடுத்தடுத்து காய்ச்சல் காரணமாக இரு குழந்தைகள், இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த இரு குழந்தைகள் உள்பட 4 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.