எடப்பாடி நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள, கொல்லப்பட்டி, நடுப்பட்டி, வெள்ளரிவெள்ளி மற்றும் மொரசப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் வினோத வெடிசத்தம் மற்றும் வீடுகள் குலுங்கியதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து எடப்பாடி - பூலாம்பட்டி சாலையில் கள்ளுக்கடை பகுதியில் வசித்து வரும் மணி (45) என்பவர் கூறுகையில், சனிக்கிழமை பிற்பகல் சுமார் ஒரு மணிஅளவில் திடீரென பெரும் வெடிசத்தம் கேட்டது. இதனால் வீட்டின் முன் உள்ள சிமென்ட் கூரை 5 நிமிடங்களுக்கு மேலாக அதிர்ந்தது என்றார்.
நடுப்பட்டியைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் தேவராஜன் (48) கூறுகையில், வயலில் வேலை செய்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது நிலநடுக்கம் போன்று பயங்கர அதிர்வுடன் சத்தம் கேட்டதால், பயந்து போய் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்ததாகக் கூறினார்.
இதேபோல மொரசப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் மக்கள் தொடர்பு அலுவலர் ராமகிருஷ்ணன் கூறுகையில், சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் அப்பகுதியில் அதிர்வு இருந்ததாகக் கூறினார்.
எடப்படியின் மேற்கு பகுதியில் உள்ள கிராமங்களில், உணரப்பட்ட இந்த வினோத வெடி சத்தம் அப்பகுதி மக்களிடையை அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.