ஏற்காட்டில் அரசுப் பேருந்தில் மொபெட் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் உயிர் தப்பினர்.
ஏற்காடு மூளுவி கிராமத்திலிருந்து 34 பயணிகளுடன் ஏற்காட்டை நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. ராஜராஜேஸ்வரி கோயில் வளைவு அருகில் பேருந்து வந்தபோது, ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்த கடலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஜாவிட் (22) மற்றும் விசூல் (23) ஆகியோர் இருசக்கர வானத்தில் சுற்றுலாப் பகுதியான சேர்வராயன் கோயிலுக்கு வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரில் அரசுப் பேருந்து வருவதைக் கண்டவுடன் அவர்கள் இருசக்கர வாகனத்திலிருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருசக்கர வாகனம் தார்ச் சாலையில் 20 அடி தூரம் சருக்கி சென்று பேருந்தின் முன்சக்கரத்தில் மாட்டியது. இதனால் பேருந்து தடுப்பு சுவரை இடித்து நின்றது. இதில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இந்தச் சம்பவம் குறித்து ஏற்காடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.