காடையாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் சனிக்கிழமை திடீர் ஆய்வு செய்தார்.
ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டி பகுதியில் சுகாதாரப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணிராம்தாஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள குழந்தைகளை, காடையாம்பட்டி அரசு மருத்துவமனையில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையளிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, ஓமலூர், காடையாம்பட்டி கிராமப் பகுதிகளில் போலி மருத்துவர்களை, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் போலி மருத்துவர்கள் குறித்த பட்டியலை உடனடியாக தயாரித்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தொடர்ந்து, காடையாம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். நோயாளிகள் நிறைவான மருத்துவ சேவைகள் வழங்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய ஆட்சியர், மருத்துவமனை வளாகத்தில் குப்பைகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க உத்தரவிட்டார்.