சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக் காலமாக பெய்த மழையால், விவசாய நிலத்தை வளப்படுத்தும் சணப்பை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தம்மம்பட்டி, கெங்கவல்லி, பச்சைமலை செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி, கூடமலை, தெடாவூர், வீரகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இப் பகுதிகளில் மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், எள் அதிகளவில் பயியிடுகின்றனர்.
பயிர்களின் விளைச்சலுக்கு தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். நெல் விவசாயிகள், தங்களது வயல்களில் நெல் பயிரையே தொடர்ந்து பயிரிடுவதால் விவசாய நிலத்தின் வளம் முழுமையாக குன்றிவிடுகிறது. இதற்காக விவசாயிகள், நிலத்தின் வளத்தை மேம்படுத்தும் சணப்பை, அவுரி, தக்காப் பூண்டு, கொழிஞ்சி போன்ற தழைச்சத்தை அளிக்கும் பயிர்களை பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். சணப்பை விதை கிலோ ரூ. 70க்கு விற்கப்படுகிறது.
குறைந்தது, 50 கிலோ வாங்கி விவசாயிகள் பயிரிடுகின்றனர்.
இதுகுறித்து தம்மம்பட்டி பகுதி விவசாயிகள் கூறியதாவது:
நிலத்தை வளப்படுத்த, தழைச்சத்துப் பயிர்களை ஆண்டுக்கு ஒருமுறையோ, இரண்டு சாகுபடிக்கு ஒருமுறையோ பயிரிட்டு, 3 மாதங்கள் முடிந்த பின்னர், அந்த வயலுக்கு முழுமையாக தண்ணீர்விட்டு, அப்பயிர்களை அப்படியே, வயலில்போட்டு உழவு செய்திடவேண்டும். அச்செடிகள் மண்ணில் மக்கி, நிலத்துக்கு நல்ல தழைச்சத்துஉரத்தைத் தரும். அதன் பின்னர் மற்ற பயிர்களை பயிரிட்டால் நன்கு விளைச்சல் தரும். ஒவ்வொரு விவசாயிகளும் தழைச்சத்து பயிர்களை ஆண்டுக்கு ஒருமுறை
கட்டாயம் பயிரிட்டால் மண்ணின் வளம் குன்றாதுஎன்றனர்.